இந்தியா

இடிக்கப்பட்ட ரிசார்ட்

உத்தரகாண்ட் ரிசார்ட்டில் வேலைபார்த்த இளம்பெண் கொலை- பாஜக தலைவரின் மகன் கைது

Published On 2022-09-24 16:16 GMT   |   Update On 2022-09-24 16:16 GMT
  • முதல்வரின் உத்தரவின் பேரில் புல்கிட் ஆர்யாவின் ரிசார்ட் இடிக்கப்பட்டது.
  • பாஜக தலைவர் வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

ஹரித்வார்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியாவின் ஓய்வு விடுதி உள்ளது. இங்கு வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண்ணின் உடல் கால்வாய் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை விரைவு படுத்தினர்.

விசாரணையில் அந்த பெண்ணின் கொலையில், அந்த பெண் வேலைபார்த்த விடுதியின் முதலாளியான புல்கிட் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புல்கித் ஆர்யா, விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதியும் இடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து பாஜக தலைவர் வினோத் ஆர்யா மற்றும் அவரது மற்றொரு மகன் அன்கிட் ஆர்யா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News