இந்தியா

உ.பி.யில் சோகம் - திருமண நாளில் புதிய தம்பதி மாரடைப்பால் திடீர் மரணம்

Published On 2023-06-04 19:39 GMT   |   Update On 2023-06-04 19:39 GMT
  • அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை.
  • உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.

லக்னோ:

உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது மகன் பிரதாப் யாதவுக்கும் (22), அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20), என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

மறுநாளான மே 31-ம் தேதி புதுமண தம்பதி வீட்டிற்கு வந்தனர். அன்றிரவு தம்பதியரை மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை. உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.

உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் சடலமாகக் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், இருவரும் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

தம்பதியின் உடலில் எந்தக் காயமும் இல்லாத நிலையில் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதிய தம்பதி மாரடைப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை என்பதால் மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ஜோடிக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், புதிய தம்பதி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண நாளில் புதிய தம்பதியினர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News