இந்தியா

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக உயர்த்த முடிவு- திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்

Published On 2024-11-23 08:05 IST   |   Update On 2024-11-23 08:05:00 IST
  • பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
  • தற்போது சராசரியாக தினமும் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. மறுநாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. நடை திறக்கப்பட்டு 7 நாட்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டில் இந்த காலக்கட்டத்தில் சாமி தரிசனம் செய்தவர்களை விட 1.75 லட்சம் பேர் அதிகம்.

இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்கள், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி தரிசன முன்பதிவு செய்யப்படுகிறது.

ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் குறிப்பிட்ட இலக்கான 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதில்லை. அதாவது தற்போது சராசரியாக தினமும் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள்.

முன்பதிவு செய்த பக்தர்கள் கடைசி நேரத்தில் வர முடியாமல் போனால் தங்களது ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் வலியுறுத்தி உள்ளது. அவ்வாறு ரத்து செய்யும்போது உடனடி முன்பதிவு செய்ய வரும் பக்தர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் வாய்ப்பு அளிக்க முடியும்.

அதேநேரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை தினசரி 80 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக கேரள ஐகோர்ட்டு அனுமதிக்காக காத்து இருக்கிறது. ஐகோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்த்தப்படும் என தேவஸ்தானம் சார்பில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News