ஜனாதிபதி பதவியை அவமரியாதை செய்து பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி #BJP
- பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.
- ஜனாதிபதியை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை.
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர் எனவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையே, ஜனாதிபதி வருகையின்போது அவரை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவை அனைத்தையும் நிகழ்ச்சியில் மேடையேறிய ஜனாதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதிலளித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரிணாமுல் காங்கிரஸ் அரசு உண்மையில் எல்லைகளை மீறிச் செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி அவமதிக்கப்பட்டதற்கு அவர்களது நிர்வாகமே பொறுப்பாகும். இது வெட்கக்கேடானது; பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்தின்மீது நம்பிக்கை பூண்டுள்ள ஒவ்வொருவரும் மனம் நொந்து போயுள்ளனர்.
பழங்குடியின சமூகப் பின்புலத்திலிருந்து வந்துள்ள ஜனாதிபதி முர்மு வெளிப்படுத்தியிருக்கும் வேதனையானது, இந்திய மக்களின் மனங்களிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் மாண்பு எப்போதுமே மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சிலிகுரியில் நடைபெறும் 9வது சர்வதேச ஆதிவாசி சந்தால் மாநாட்டிற்கு ஜனாதிபதியை தனியார் அமைப்பான சர்வதேச சந்தால் கவுன்சில் அழைத்தது.
சிலிகுரி நகராட்சி மேயர், சிலிகுரி காவல் ஆணையர் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை.
பாஜக தனது சொந்த கட்சியின் அஜெண்டாவிற்கு நாட்டின் மிக உயர்ந்த தலைவரை அவமதித்து தவறாகப் பயன்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார்.