இந்தியா

திருமண கோஷ்டியினர் சென்ற அரசு பஸ்சுக்கு மிதமிஞ்சிய தோரணம்- டிரைவர் மீது நடவடிக்கை

Published On 2022-11-08 03:19 GMT   |   Update On 2022-11-08 03:19 GMT
  • பஸ் முழுவதும் வாழை தோரணங்கள், இலை, தழைகள் கட்டி அலங்கரித்தனர்.
  • பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடியை மறைக்கும் வகையிலும் வாழை தோரணங்கள் மிதமிஞ்சிய அளவில் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு பஸ்கள் குறைந்த செலவில் வாடகைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அரசு பஸ்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் எர்ணாகுளம் அருகே நெல்லிக்குழியை சேர்ந்த ரமீஸ் என்பவர் தனது நண்பர் மாகீன் திருமணத்திற்கு ஒரு அரசு பஸ்சை வாடகைக்கு எடுத்தார். இதற்காக ரூ.10 ஆயிரம் பணம் செலுத்தினார்.

பின்னர் அந்த பஸ் முழுவதும் வாழை தோரணங்கள், இலை, தழைகள் கட்டி அலங்கரித்தனர். தொடர்ந்து நெல்லிக்குழி பகுதியில் இருந்து இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் உள்ள மணமகள் வீட்டுக்கு திருமண நிகழ்ச்சிக்காக அந்த பஸ்சில் திருமண கோஷ்டியினர் சென்றனர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடியை மறைக்கும் வகையிலும் வாழை தோரணங்கள் மிதமிஞ்சிய அளவில் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நேற்று பஸ் டிரைவர் ரஷீத்தின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், கண்ணாடியை மறைத்து வாழை தோரணங்கள் கட்டியதால் பாதுகாப்புக்கு கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாக கூறி டிரைவர் ரஷீத் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News