இந்தியா

செலவினங்களை குறைக்க 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்பைஸ்ஜெட்

Published On 2024-02-12 11:05 GMT   |   Update On 2024-02-12 14:44 GMT
  • 30 விமானங்களை இயக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 9000 ஊழியர்கள் உள்ளனர்
  • பணிநீக்கத்தால் ரூ.100 கோடி சேமிக்க முடியும் என்றார் செய்தி தொடர்பாளர்

குறைந்த கட்டண தனியார் விமான சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அரியானா மாநிலம், குர்காவோன் பகுதியை தலைமையிடமாக கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet).

புது டெல்லி மற்றும் ஐதராபாத் நகரங்களை தளமாக கொண்டு 60 இந்திய நகரங்களையும், 13 சர்வதேச நகரங்களையும் இணைக்கிறது ஸ்பைஸ்ஜெட்.

30 விமானங்களை கொண்டு சேவையாற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சுமார் 9,000 பணியாளர்கள் பணி புரிகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வந்தது.

ஜனவரி மாத சம்பளம் பல ஊழியர்களுக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட், தனது ஊழியர்களில் 15 சதவீதம் பேரை பணிநீக்க உள்ளதாக அறிவித்தது.

இந்த உத்தரவு சுமார் 1,400 பணியாளர்களை பாதிக்கும் என தெரிகிறது.

இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது:

அனாவசிய செலவுகளை குறைக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.

இதன் மூலம் மனித வளம் முறையாக பயன்படுத்தப்படவும், வருவாயை அதிகரிக்கவும், இந்திய வான்வெளி போக்குவரத்து துறையில் முன்னே செல்லவும் நிறுவனம் முயன்று வருகிறது.

இந்த பணிநீக்க நடவடிக்கையின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.100 கோடி வரை சேமிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News