பதவி பறிப்பு மசோதா: தமிழ்நாட்டின் அமைச்சர்கள் சிறை சென்றபிறகும் ராஜினாமா செய்யவில்லை- அமித் ஷா
- முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும்
- கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும்.
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் அந்த மசோதாவின் முக்கியம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், இந்த மசோதா குறித்து பேசிய அமித் ஷா, "நாட்டின் பிரதமர் சிறைக்குச் சென்றால், பிரதமரோ அல்லது முதலமைச்சரோ சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவது சரியா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சிறையிலிருந்து யாராவது அரசாங்கத்தை நடத்த வேண்டுமா? சுதந்திரம் பெற்றதிலிருந்து, பல தலைவர்கள் சிறைக்குச் சென்றுள்ளனர். ஆனால் சமீபத்தில், சிறைக்குச் சென்ற பிறகும் பல தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாத ஒரு போக்கு தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை, டெல்லியின் அமைச்சர்களும் முதல்வரும் ராஜினாமா செய்யவில்லை. இது உலகளவில் நமது ஜனநாயகத்திற்கு மதிப்பு தருமா?
காங்கிரஸ் இந்த மசோதாவை வெளிப்படையாக எதிர்க்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, மன்மோகன் சிங் அதன் பிரதமராகவும், லாலு பிரசாத் யாதவ் அமைச்சராகவும் இருந்தார். லாலு பிரசாத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அப்போது மன்மோகன் அரசு ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்த சமயத்தில் ராகுல் காந்தி ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதை முற்றிலும் முட்டாள்தனம் என்று கூறி பகிரங்கமாகக் கிழித்தெறிந்தார்,
அவர் அவசரச் சட்டத்தையும், நாட்டின் அமைச்சரவையையும் பிரதமரும் எடுத்த முடிவையும், அவரது சொந்தக் கட்சியின் பிரதமரால் எடுக்கப்பட்ட முடிவையும், தார்மீக அடிப்படையில் கேலி செய்தார், அப்போது மன்மோகன் சிங் உலகம் முழுவதும் ஒரு பரிதாபகரமான நபராகிவிட்டார். இன்று, பீகாரில் ஆட்சி அமைப்பதற்கு அதே ராகுல் காந்தி லாலு பிரசாத்தை கட்டிப்பிடிக்கிறார். இது இரட்டை வேடம் இல்லையா?" என்று தெரிவித்தார்.