இந்தியா

பொதுமக்கள், போலீசாரை தாக்கிய நிர்வாண பெண் அகோரி- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2024-11-19 10:11 IST   |   Update On 2024-11-19 10:11:00 IST
  • பொதுமக்கள் தங்களது செல்போனில் பெண் அகோரியை வீடியோ எடுத்தனர்.
  • இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பெண் அகோரி, திரிசூலத்தால் பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கினார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், மங்களகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ நகருக்கு 25 வயது மதிக்க தக்க பெண் அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் காரில் வந்தார்.

அங்குள்ள வாட்டர் சர்வீஸ் மையத்திற்கு வந்த அகோரி தனது காரை சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் வந்துள்ள தகவல் அப்பகுதியில் பரவியது.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது சிலர் தங்களது செல்போனில் பெண் அகோரியை வீடியோ எடுத்தனர்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பெண் அகோரி தன்னிடம் இருந்த திரிசூலத்தால் பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கினார்.

தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய பலர் தேசிய நெடுஞ்சாலை நடுவில் உள்ள தடுப்பு மற்றும் செடிகள் மீது விழுந்து எழுந்து காயமடைந்து தப்பிச் சென்றனர்.

மங்களகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பெண் அகோரியை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரையும் தாக்கினார்.

இதில் போலீசாரும் காயமடைந்தனர். ஒரு வழியாக பெண் அகோரியை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த திரிசூலத்தை பறிமுதல் செய்தனர்.

பெண் அகோரியை கயிற்றால் கட்டி போட்டனர். பின்னர் போலீசார் துணியை எடுத்து வந்து அவரது உடலில் சுற்றினர். சிறிது நேரத்திற்கு பிறகு அகோரியை கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்தனர்.

அப்போது அகோரி மீண்டும் பொதுமக்களை தாக்க தொடங்கினார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் ஒரு வழியாக அகோரியை பாதுகாப்புடன் ஆந்திர எல்லையை தாண்டி தெலுங்கானா எல்லையில் விட்டனர்.

பெண் அகோரி அட்டகாசம் செய்ததால் விஜயவாடா, ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags:    

Similar News