தெலுங்கானா சட்டசபை தேர்தல்: 7 தொகுதிகளுக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமனம்
- தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கி உள்ளது.
- வருகிற 3-ந்தேதி அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடக்கிறது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் தெலுங்கு ராஷ்ட்ர சமிதி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கி உள்ளது.
தமிழகத்தில் இருந்து 7 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு 7 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் தெரிந்தவர்களை தேர்வு செய்து நியமித்துள்ளார்கள்.
ஜகீராபாத் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் முன்னாள் மத்திய சென்னை மாவட்ட தலைவருமான ரங்கபாஷ்யம் கம்மாரெட்டி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு அந்தோல் தொகுதி, முகமது அலிசமீர் பன்ஸ்வாடா தொகுதி, அன்பு வீரமணி ஜுக்கல் தொகுதி, சலீம் சேட் நாராயண்கட் தொகுதி, மோகன் வெங்கடேசன் எல்லா ரெட்டி தொகுதி, பழனியப்பன் ஜகீராபாத் தொகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வருகிற 3-ந்தேதி அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடக்கிறது. அதை தொடர்ந்து தேர்தல் வரை தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.