இந்தியா

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்- இரண்டு அணிகளுக்கும் செக்

Published On 2022-10-08 16:58 GMT   |   Update On 2022-10-08 16:58 GMT
  • அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
  • சிவ சேனா கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் சட்டப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மும்பை:

மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. சிவ சேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் 2 அணிகளாக பிரிந்து, தனித்தனியே கட்சிக்கு உரிமை கோரிய நிலையில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் மறு அறிவிப்பு வெளியிடும் வரை 'வில், அம்பு' சின்னத்தை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, அந்தேரி (கிழக்கு) தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும். வரும் 10ஆம் தேதி (நாளை மறுநாள்) மதியம் 1 மணிக்குள் இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயர் மற்றும் சின்னத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

சிவசேனாவின் முக்கிய தலைவரான ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 20ஆம் தேதி உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். மொத்தம் உள்ள 55 சேனா எம்எல்ஏக்களில் 40 எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாக திரும்பினர். மொத்தமுள்ள 18 சிவசேனா மக்களவை எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு மாறினர்.

உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

அதன்பின்னர் சிவ சேனா கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு சட்டப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என கூறி வருவதால் தேர்தல் ஆணையம் தற்போது சின்னத்தை முடக்கி உள்ளது.

Tags:    

Similar News