இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

Published On 2023-11-10 04:36 GMT   |   Update On 2023-11-10 04:36 GMT
  • தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • பக்தர்கள் யாரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்காக இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான ஆன்லைன் முகவரி மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கான 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட உள்ளனர்.

இதனை பெற்றுக்கொண்ட பக்தர்களும், ரூ.300 டிக்கெட் வாங்கிய பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், இன்று மாலை 5 மணிக்கு 10 நாட்கள் திருமலையில் தங்கும் விடுதிகளுக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பக்தர்கள் யாரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 56, 723 பேர் தரிசனம் செய்தனர். 21,778 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 5 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி திசனம் செய்தனர்.

Tags:    

Similar News