இந்தியா

யார் முதுகிலும் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்- டி.கே.சிவக்குமார்

Published On 2023-05-16 05:25 GMT   |   Update On 2023-05-16 13:58 GMT
  • காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை.
  • என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன்.

பெங்களூரு:

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து முதல்-மந்திரி பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரித்து கருத்து கூறி இருப்பதாகவும், அதனால் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பெரும்பான்மையான லிங்காயது, ஒக்கலிகர் சமூகங்களை சேர்ந்த மடாதிபதிகள் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்.

அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார். சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து டெல்லி மேலிட தலைவர்கள் டி.கே.சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டி.கே.சிவக்குமாரிடம் போனில் பேசிய பிரியங்கா காந்தி பேச்சுவார்த்தைக்காக டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று டி.கே.சிவக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று பிற்பகலில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி எனக்கு பலத்தை அளித்துள்ளது, மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் என்னும் வீட்டில் நானும் ஒரு பகுதி. யார் முதுகிலும் நான் குத்தமாட்டேன். யாரையும் மிரட்ட மாட்டேன். காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பின்னர் காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்-மந்திரியை அறிவித்து, பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News