இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2022-08-25 07:47 GMT   |   Update On 2022-08-25 07:47 GMT
  • சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
  • இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளவும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags:    

Similar News