டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- போலீஸ் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி துக்ளக் ரோடு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- இந்திய தண்டனை சட்டம் 186 மற்றும் 188 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.
தலைநகர் டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை, ஆனாலும் அதை மீறி டெல்லி விஜய் சவுக் பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி மற்றும் 65 எம்.பி.க்.கள், தலைவர்கள் உள்ளிட்ட 335 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரியங்கா காந்தியும் கைதானார். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி துக்ளக் ரோடு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 186 மற்றும் 188 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அவர்கள் மீது போராட்டம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்துடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.