இந்தியா

குண்டும், குழியுமான சாலைகளில் திருமண போட்டோ ஷூட் நடத்திய மணமகள்

Published On 2022-09-21 05:00 GMT   |   Update On 2022-09-21 05:00 GMT
  • சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கேரள சாலைகளின் அவலம் பற்றி பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தன.
  • சமீபத்தில் வெளியான ஒரு பெண்ணின் திருமண போட்டோ ஷூட் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியும், கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் சாலையை சீரமைக்க கோரி போராட்டங்கள் நடத்தின.

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாகவே சாலைகள் மோசமாக இருப்பதாக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் சாலைகளை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கேரள சாலைகளின் அவலம் பற்றி பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தன.

என்றாலும் சமீபத்தில் வெளியான ஒரு பெண்ணின் திருமண போட்டோ ஷூட் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ ஒரு பெண்ணின் திருமண போட்டோ ஷூட் வீடியோவாகும். பொத்தலான சாலையில் திருமண போட்டோ ஷூட் என்ற பெயரில் வெளியான அந்த வீடியோவில் ஒரு மணப்பெண், குண்டும், குழியுமான சாலையில் அழகாக நடந்து வருகிறார்.

சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீரும், சேறும் நிரம்பி இருக்கிறது. அந்த வழியாக செல்லும் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. இதுதான் கேரள சாலைகளின் நிலை என்று அந்த வீடியோ விளக்குகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கடந்த 11-ந்தேதி பகிரப்பட்டது. இது வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரலானது. இதுவரை இந்த வீடியோவை சுமார் 43 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

3 லட்சத்து 70 ஆயிரம் பேர் லைக் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ மூலம் கேரள சாலைகளின் அவல நிலை சந்தி சிரிப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News