இந்தியா

வளைகுடா நாட்டில் தொழில்நிறுவனங்கள் நடத்தும் மாமனாரை ஏமாற்றி ரூ.108 கோடி மோசடி செய்த மருமகன்

Published On 2023-06-10 06:49 GMT   |   Update On 2023-06-10 06:49 GMT
  • வளைகுடா நாடான துபாயில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருபவர் லஹிர் ஹாசன். கோடீஸ்வரர்.
  • ஹபீஸ், மாமனாரின் வங்கி கணக்குகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.107.99 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

திருவனந்தபுரம்:

வளைகுடா நாடான துபாயில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருபவர் லஹிர் ஹாசன். கோடீஸ்வரர்.

இவரது ஒரே மகளுக்கும் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த வாலிபர் ஹபீசுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர், லஹிர் ஹாசனின் தொழில் நிறுவனங்களின் வரவு-செலவுகளை ஹபீஸ் பார்த்து கொண்டார்.

அப்போது லஹிர் ஹாசனின் வங்கி கணக்குகளில் இருந்து பலகோடி பணம் எடுக்கப்பட்டது. இதுபற்றி அவர் கேட்ட போது, நிறுவனத்தில் நடந்த சோதனைகள், வருமான வரித்துறைக்கு அளித்த தொகை என ஹபீஸ் பல்வேறு சாக்குபோக்குகளை கூறினார்.

இதுபற்றி லஹிர் ஹாசன், தனது மகளிடம் கூறினார். அவர், தந்தையின் நிறுவன கணக்குகளை ஆய்வு செய்த போது பலகோடி பணம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. மேலும் வருமான வரித்துறையினர் அளித்த நோட்டீசு என ஹபீஸ் அளித்த கடிதங்கள் அனைத்தும் போலி எனவும் தெரியவந்தது.

மேலும் இந்த போலி கடிதங்கள் மூலம் ஹபீஸ், மாமனாரின் வங்கி கணக்குகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.107.99 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றி ஹபீசின் மனைவி கேரளா போலீசில் புகார் செய்தார். கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஹபீசின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் போலி நோட்டீசு தயாரித்து அதனை காண்பித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து கேரளாவின் ஆலுவா மற்றும் கோவா மாநில போலீசார் ஹபீஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 465, 468, 471 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதை அறிந்ததும் ஹபீஸ் தலைமறைவாகி விட்டார். அவரை கோவா போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற கோவா போலீசார் ஹபீசை கைது செய்தனர். பின்னர் அவரை போன்டாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று முதல் அவரிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

Tags:    

Similar News