டெல்லியில் இலவச மருத்துவ பரிசோதனைகள் திட்டம்- ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
- சுகாதாரத் துறை முன்மொழிவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
- செய்தி ஒன்றை டுவிட்டரில் டேக் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் சுமார் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, டெல்லி அரசால் இலவசமாக 212 மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் கூடுதலாக 238 பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்காக சுகாதாரத் துறை முன்மொழிவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்" என கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுதொடர்பாக வெளியான செய்தி ஒன்றை டுவிட்டரில் டேக் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " எவருடைய பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் நல்ல தரமான சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குவது எங்கள் நோக்கம். சுகாதாரம் விலை உயர்ந்ததாகிவிட்டது. பலரால் தனியார் மருத்துவமனைகளில் செலவழிக்க முடியாது. அத்தகைய அனைவருக்கும் இந்த திட்டம் உதவும் " என குறிப்பிட்டிருந்தார்.