இந்தியா

டயர் வெடித்து பயங்கர விபத்து: 3 பேருந்துகள் மீது சிமெண்ட் லாரி மோதியதில் 14 பேர் பலி- 60 பேர் படுகாயம்

Published On 2023-02-25 10:50 IST   |   Update On 2023-02-25 10:50:00 IST
  • விபத்தில் காயமடைந்தர்களை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சந்தித்து பேசினார்.
  • இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பல நலத்திட்டங்களும் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், ரேவா- சட்னா எல்லையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது சிமெண்ட் ஏற்றிக் கொண்டு வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகே இரவு 9 மணியளவில் மகாகும்பத்தில் கலந்து கொண்டு திரும்பிய பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அவ்வழியாக வந்த சிமெண்ட் லாரியின் டயர் வெடித்ததில் ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்துகள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) டாக்டர் ராஜேஷ் ரஜோரா கூறுகையில், "இந்த கோர விபத்தில், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில், காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்தர்களை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேவைப்பட்டால் மேற்சிகிச்சைக்காக நோயாளிகள் ரேவாவிற்கு வெளியே விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பல நலத்திட்டங்களும் வழங்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News