இந்தியா

இலங்கையை போல் ஆந்திராவை மாற்றி வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

Published On 2022-07-07 11:18 GMT   |   Update On 2022-07-07 11:18 GMT
  • அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் 8000 பள்ளிகளை மூடுவதற்கு அரசு தயாராக உள்ளது.
  • முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது மகளை பாரீசில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் அன்னம்மையா மாவட்டம் மதன பள்ளியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.

குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி மிகவும் மோசமடைந்து உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டுகின்றனர்.

அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் 8000 பள்ளிகளை மூடுவதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது மகளை பாரீசில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.

ஆந்திராவில் புதிது புதிதாக மதுபான ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மதுபான ஆலைகளில் தயாரிக்கும் மதுவில் விஷத்தன்மை அதிகம் உள்ளதால் மது அருந்தும் ஏராளமானோர் இறந்து வருகின்றனர்.

தனியார் பரிசோதனை மையத்தில் அரசு விற்கும் மதுபானங்கள் அதிக அளவு விஷத்தன்மை உள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறார். ஆந்திராவில் பிறக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

தற்போது ஆந்திர மாநில அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையை போல் ஆந்திராவையும் ஜெகன்மோகன் ரெட்டி மாற்றி வருகிறார்.

இதனை தட்டிக் கேட்கும் தெலுங்கு தேச கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை தலைமை செயலகம் கட்டாமல் தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News