இந்தியா

மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் 2 பேர் கழுத்தறுத்து படுகொலை

Published On 2022-12-15 14:55 IST   |   Update On 2022-12-15 14:55:00 IST
  • போதை கும்பல் யாரேனும் பலாத்காரம் செய்ய முயன்ற போது ஏற்பட்ட தகராறில் 2 பேரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • சம்மந்தப்பட்ட பகுதியில் போதை கும்பல் யாரேனும் சுற்றி திரிகிறார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், நன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்ணா. இவருக்கு ராம கோவிந்தடு, சின்ன ராம கோவிந்தடு என 2 மகன்கள் உள்ளனர்.

ராம கோவிந்தடுக்கு ராமேஸ்வரி (வயது 26) என்ற மனைவியும், சின்ன ராம கோவிந்தடுக்கு ரேணுகா (21) என்ற மனைவியும் இருந்தனர். அண்ணன், தம்பி இருவருக்கும் குழந்தைகள் இல்லை.

ராமேஸ்வரி, ரேணுகா இருவரும் தங்களது கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தினமும் மாடு மேய்ப்பது வழக்கம். நேற்று காலை ராம கோவிந்தடு ராமேஸ்வரி, தம்பி மகள் ரேணுகாவை தனது பைக்கில் அழைத்துச் சென்று வனப்பகுதியில் மாடு மேய்க்க விட்டு விட்டு வந்தார். இவர்கள் தினமும் மாடு மேய்த்து விட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.

நேற்று மாலை 6 மணி ஆகியும் மாடு மேய்க்க சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அண்ணன் தம்பி இருவரும் பைக்கில் சென்று வனப்பகுதியில் 2 பேரையும் தேடினர்.

அப்போது வனப்பகுதியில் ராமேஸ்வரி, ரேணுகா இருவரும் அருகருகே தலையில் பலத்த காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து கர்னூல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கர்னூல் டிஎஸ்பி வெங்கட ரமணய்யா, இன்ஸ்பெக்டர் சீனிவாசலு ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ராமேஸ்வரி, ரேணுகா ஆகியோரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போதை கும்பல் யாரேனும் பலாத்காரம் செய்ய முயன்ற போது ஏற்பட்ட தகராறில் 2 பேரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட பகுதியில் போதை கும்பல் யாரேனும் சுற்றி திரிகிறார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News