இந்தியா

திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர்கள் வெடித்து விபத்து- 2 குழந்தைகள் பலி

Published On 2022-12-09 03:40 GMT   |   Update On 2022-12-09 07:08 GMT
  • வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.
  • 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள புங்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண விருந்துக்காக சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தன.

இதில் திருமணம் நடந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சிலிண்டர்கள் வெடித்ததில் ரத்தன்சிங் என்ற 5 வயது சிறுவனும், குஷ்பு என்ற 4 வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.

சிலருக்கு 80 முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கியாஸ் சிலிண்டர்களால் ஏற்பட்ட கசிவு காாரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குப்தா கூறும்போது, "இது மிகவும் மோசமான விபத்து. காயமடைந்த 50 பேரில் 42 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சரும் ஜோத்பூர் தொகுதி எம்.பி.யுமான கஜேந்திரசிங் செகாவத் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

காயம் அடைந்தர்களை இன்று மாலை முதல்வர் அசோக் கெலாட் மருத்துவமனைக்கு சென்று பார்க்கிறார்.

Tags:    

Similar News