இந்தியா

128 நாட்களில் இல்லாத அளவில் பாதிப்பு உயர்வு- இந்தியாவில் ஒரே நாளில் 1,071 பேருக்கு கொரோனா

Published On 2023-03-19 05:25 GMT   |   Update On 2023-03-19 05:25 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 542 பேர் நலம் பெற்று உள்ளனர்.
  • இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து 703 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் இம்மாத தொடக்கத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 200-க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பு 2 நாட்களுக்கு முன்பு 700-ஐ தாண்டி இருந்தது. பாதிப்பு கடந்த 16-ந் தேதி 754, 17-ந் தேதி 796 ஆக இருந்த நிலையில் நேற்று 843 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,071 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 10-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 1,016 ஆக இருந்தது. அதன் பின்னர், 128 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 249 பேர், குஜராத்தில் 179 பேர், கேரளாவில் 163 பேர், கர்நாடகாவில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 95 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 542 பேர் நலம் பெற்று உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து 703 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 5,915 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 526 அதிகமாகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,802 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News