இந்தியா

கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து தொழிலாளி பலி

Published On 2024-03-22 06:20 GMT   |   Update On 2024-03-22 06:20 GMT
  • பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
  • 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாட்னா:

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் மரிச்சா பகுதியில் கோசி ஆற்றின் மீது பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கட்டுமானப்பணியின் போது திடீரென பாலத்தின் பலகை இடிந்து பாலம் உடைந்து விழுந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனால் தொழிலாளர்கள் அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், தன்னாவலர்கள் உதவியோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags:    

Similar News