இந்தியா

எஸ்.எஸ்.சி. நடத்தும் இந்த தேர்வுகளை இனி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம்

Published On 2023-04-18 13:51 GMT   |   Update On 2023-04-18 13:51 GMT
  • தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்தவேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
  • மொழி தடையால் ஒருவரது உரிமை பறிபோகக்கூடாது எனபதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசின் பணிகளில் சேருவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இந்த தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தவேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி எம்.டி.எஸ் மற்றும் சி.எச்.எஸ்.எல். ஆகிய தேர்வுகளை தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்துவதற்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.

எனவே, இந்த தேர்வுளுக்கான வினாத்தாள் ஆங்கிலம், இந்தி தவிர பிராந்திய மொழிகளான அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும்.

மத்திய அரசின் பணிகளில் சமவாய்ப்பு கிடைக்கவேண்டும், மேலும் மொழி தடையால் ஒருவரது உரிமை பறிபோகக்கூடாது எனபதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து வரும் இளைஞர்கள், தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதி பலனடைய வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது.

ஏற்கனவே மத்திய ஆயுதப்படை தேர்வான, சிஏபிஎப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News