இந்தியா

மகாராஷ்டிராவின் ஒரே காங்கிரஸ் எம்.பி. பாலு தனோர்கர் மறைவு: விஜய் வசந்த்- தலைவர்கள் இரங்கல்

Published On 2023-05-30 11:42 GMT   |   Update On 2023-05-30 11:42 GMT
  • தனோர்கரின் உடல் இன்று சொந்த ஊரான வரோராவுக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது.
  • தனோர்கரின் தந்தை கடந்த சனிக்கிழமை காலமான நிலையில் இன்று அவர் காலமானது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு தலைவர் சுரேஷ் நாராயணன் தனோர்கர் (வயது 47). இவர் சிறுநீரக கற்களை நீக்கும் சிகிச்சைக்காக கடந்த வாரம் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுடெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார்.

அவரது உடல் இன்று சொந்த ஊரான வரோராவுக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை காலையில் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன. தனோர்கரின் தந்தை கடந்த சனிக்கிழமை காலமான நிலையில், அடுத்த ஓரிரு தினங்களில் தனோர்கரும் காலமானது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இன்று இயற்கை எய்திய மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் நாராயணன் தானோர்கர் அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News