இந்தியா

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை அள்ளி வீசிய காங்கிரஸ் தலைவர்

Published On 2023-03-29 10:51 IST   |   Update On 2023-03-29 10:51:00 IST
  • மண்டியா மாவட்டம் பேவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
  • டி.கே.சிவக்குமார் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி பணத்தை வீசி எறிந்தார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா், தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை வீசி எறிந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மண்டியா மாவட்டம் பேவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திறந்த வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். அந்த சமயத்தில், டி.கே.சிவக்குமார் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி பணத்தை வீசி எறிந்தார். அந்த பணத்தை மக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News