இந்தியா

தேசியவாத காங்கிரசில் இருந்து பிரபுல் பட்டேல் நீக்கம்.. தகுதிநீக்கம் செய்யவும் கட்சி தலைமை நடவடிக்கை

Published On 2023-07-03 16:09 GMT   |   Update On 2023-07-03 16:09 GMT
  • பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
  • எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அஜித் பவார் மாநில துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றார்.

அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல், கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுனில் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் பிரபுல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்.பி. சுனில் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவு அளித்து மந்திரிகளாக பதவியேற்ற 9 பேரையும் தகுதிநீக்கம் செய்யும்படி, சபாநாயகருக்கு இ-மெயில் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News