குடும்ப சூழ்நிலையால் நான் ராணுவத்தில் சேர முடியவில்லை: ராஜ்நாத் சிங்
- ஒரு குழந்தைக்கு ராணுவ சீருடை அணிவித்தால் கூட, அதன் ஆளுமை மாறிவிடும்.
- நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திக்க விரும்புவேன்.
இம்பால் :
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் சென்றார். இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் மற்றும் 57-வது மலைப்பகுதி பிரிவின் வீரர்களை சந்தித்தார். அவர்களிடையே ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
இளம்வயதில் நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். அதற்காக ஒருதடவை தேர்வாணைய எழுத்து தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால், என் தந்தை மரணம் உள்ளிட்ட குடும்ப சூழ்நிலைகள் காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை.
ஒரு குழந்தைக்கு ராணுவ சீருடை அணிவித்தால் கூட, அதன் ஆளுமை மாறிவிடும். அந்த அளவுக்கு இந்த சீருடையில் ஒரு ஈர்ப்புசக்தி உள்ளது.
இந்தியா-சீனா மோதலின்போது நடந்த எல்லா விவரங்களும் உங்களுக்கு தெரிந்திருக்காது. நமது வீரர்கள் காண்பித்த துணிச்சலையும், வீரத்தையும் நானும், அப்போதைய ராணுவ தளபதியும் அறிவோம். உங்களுக்கு நாடு கடன்பட்டிருக்கிறது.
நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திக்க விரும்புவேன். உங்களை சந்திப்பது எனக்கு பெருமையான விஷயம்.
இவ்வாறு அவர் பேசினார்.