வாலிபரை கடத்திச் சென்று மூக்கை அறுத்த கொடூரம்... மனைவியின் குடும்பத்தினர் வெறிச்செயல்
- தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாக ஹமித் கான் கூறி உள்ளார்.
- எதிர்தரப்பில் பெண்ணின் தந்தை பீர்பால் கான் என்பவர் மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் ஹமித் கான் என்ற வாலிபரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் கும்பலாக வந்து கடத்திச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவரது மூக்கையும் அறுத்துள்ளனர். திருமணத்தை ஏற்காததால் மனைவியின் குடும்பத்தினர் இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹமித் கான், கெகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னையும் தன் மனைவி ரஜியாவையும் வீட்டில் இருந்து ஒரு வாகனத்தில் கடத்தி சென்றதாகவும், பின்னர் தன்னை மட்டும் வேறு வாகனத்தில் கடத்திச் சென்று நாகவுர் மாவட்டம் மரோத் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகில் வைத்து கடுமையாக தாக்கி தனது மூக்கை அறுத்ததாகவும் ஹமித் கான் கூறி உள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறி உள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஜியாவின் தந்தை பீர்பால் கான் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் எதிர்தரப்பில் பீர்பால் கான் தன் மகளை காணவில்லை என்று மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக போலீசாரிடம் விசாரணையின்போது கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.