இந்தியா

UP Exam | பண்டிட்கள், சந்தர்ப்பவாதிகள்... போட்டித் தேர்வு வினாத்தாளால் கிளம்பிய புது சர்ச்சை

Published On 2026-03-15 13:56 IST   |   Update On 2026-03-15 13:57:00 IST
  • விருப்பம் வழங்கப்பட்டு இருப்பது மற்றொரு புயலைத் தூண்டியது.
  • இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையை தூண்டியது.

பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ்-இல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான 'கூஷ்கோர் பந்தட்' சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, உத்தர பிரதேச மாநிலத்தின் காவல் துறை ஆட்சேர்ப்புத் தேர்வில் சந்தர்ப்பவாதிகள் குறித்த கேள்விக்கு "பண்டிட்" என்ற விருப்பம் வழங்கப்பட்டு இருப்பது மற்றொரு புயலைத் தூண்டியுள்ளது.

கேள்விக்கு வழங்கப்பட்ட பதில்களில் பண்டிட் என்ற வார்த்தையால் சர்ச்சை அதிகரித்ததால், உத்தர பிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியம் (UPPRPB) இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநில காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆட்சேர்ப்புக்காக நேற்று (மார்ச் 14) நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் இந்தி பிரிவில் இடம்பெற்ற கேள்வி, வாய்ப்புக்கு ஏற்ப மாறும் ஒரு நபருக்கு ஒரு வார்த்தை பதிலைத் தேர்வு செய்யுமாறு தேர்வர்களைக் கேட்டுக் கொண்டது.

அதன் படி கேள்வி ஒன்றுக்கு தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டிய ஒருவார்த்தை விருப்ப பதில்களில் "பண்டிட்", "சந்தர்ப்பவாதி", "அப்பாவி" மற்றும் "விர்ச்சுவஸ்" ஆகியவை இடம்பெற்று இருந்தது.

இந்த விவகாரம் பேசு பொருளான நிலையில், உத்தர பிரதேச பா.ஜ.க. செயலாளர் அபிஜத் மிஸ்ரா, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி, கேள்வியை உருவாக்கியதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். "பண்டிட்" என்ற வார்த்தையை விருப்பங்களில் சேர்ப்பது பிராமண சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறியதை தொடர்ந்து, இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையை தூண்டியது.

"வாய்ப்புக்கு ஏற்ப மாறும் ஒரு நபரின் சரியான அர்த்தம் 'சந்தர்ப்பவாதி', ஆனால் விருப்பங்களில் 'பண்டிட்' என்பதை சேர்ப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துகிறது," என்று மிஸ்ரா கூறினார், "பண்டிட்" என்ற சொல் அறிவு மற்றும் மத மரியாதையுடன் தொடர்புடையது.

எந்தவொரு தனிநபர், சாதி, மதம் அல்லது சமூகத்தின் கண்ணியம் அல்லது மத உணர்வுகள் குறித்து அவமதிப்பான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அனைத்து ஆட்சேர்ப்பு வாரியங்களின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News