இந்தியா

காப்பீட்டு தொகை உயர்த்தப்படும்: சத்தீஸ்கரில் ராகுல் வாக்குறுதி

Published On 2023-10-30 10:49 GMT   |   Update On 2023-10-30 13:29 GMT
  • காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என ராகுல் கூறினார்
  • ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என உறுதியளித்தார்

இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

அடுத்த வருடம், இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநில தேர்தலை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. எனவே இதில் வெல்ல தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். நிலமில்லாத கூலி தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, தற்போது வழங்கப்படும் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். இது குறித்து நான் முதல்வர் பூபேஷ் பாகேலுடன் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். அது மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 2018ல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி விட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் முன்பு போல் தங்கள் நிலங்களை விற்காமல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு ராகுல் கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் முதல்வர் பூபேஷ் பாகேல், துணை முதல்வர் சிங் தியோ, உள்துறை அமைச்சர் டம்ரத்வாஜ் சாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடாமல் தேர்தல் பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்தும் யுக்தியை தற்போது காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது.

Tags:    

Similar News