2 லட்சம் மகளிர் பங்கேற்கும் மெகா கூட்டம்: பிரதமர் மோடி நாளை கேரளா வருகை
- பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நாளை நடத்தப்படுகிறது.
- இது மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கும்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் அம்மாநில பா.ஜ.க. சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நாளை நடத்தப்படுகிறது. திருச்சூர் தேக்கிங்காடு மைதானத்தில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
'ஸ்ரீ சக்தி சங்கமம்' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதுதொடர்பாக கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறுகையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக ஸ்ரீ சக்தி சங்கமம் என்ற கூட்டம் திருச்சூரில் ஜனவரி 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். தென்மாநிலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில்லை. இந்த நிகழ்ச்சி தேசிய அளவில் முதல் நிகழ்வாக இருக்கும் என தெரிவித்தார்.