பீகார் மாநில முதல் மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
- ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்தன.
- நிதிஷ்குமார் பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக நாளை பதவியேற்க உள்ளார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் இன்று அறிவித்தார்.
அதன்பின், ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் கொடுத்தார்.
இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.
இதையடுத்து, பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார்.
இந்நிலையில், பாட்னாவில் நாளை மதியம் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார்.