இந்தியா

கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி மத்திய அரசு தகவல்

Published On 2022-07-01 03:13 GMT   |   Update On 2022-07-01 03:13 GMT
  • கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்.பி.க்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி.
  • தற்போதைய எம்.பி.க்களின் பயண செலவு ரூ.35.21 கோடி என கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி :

பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதைப்போல முன்னாள் எம்.பி.க்கள் 2-ம் வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனது துணையுடனோ அல்லது முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனிமையிலோ இலவச பயணத்தை மேற்கொள்ளலாம்.

இதற்கான கட்டணத்தை மத்திய அரசு செலுத்தும். ரெயில்வேயின் கட்டணம் மற்றும் கணக்குகள் துறை இதற்கான ரசீதை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் பயணம் செய்த வகையில் மத்திய அரசு செலவழித்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்துக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் கடிதம் அனுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள மக்களவை செயலகம், கடந்த 5 ஆண்டுகளில் மேற்படி எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என பதில் அளித்து உள்ளது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்.பி.க்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி எனவும், தற்போதைய எம்.பி.க்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020-21-ம் ஆண்டில் இந்த செலவு முறையே ரூ.1.18 கோடி மற்றும் ரூ.1.29 கோடி எனவும் மக்களவை செயலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News