இந்தியா

கைக்குழந்தையை சேற்றில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது

Published On 2023-09-13 05:36 GMT   |   Update On 2023-09-13 05:36 GMT
  • குழந்தையின் தலை பகுதி முழுவதுமாக சேற்றுக்குள் மூழ்கி இருந்தது.
  • சுமங்கலி தனது குழந்தையை சேற்றில் மூழ்கடித்து எதற்காக கொன்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உப்பலா அருகே உள்ள பச்சிலம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சத்திய நாராயணன். இவரது மனைவி சுமங்கலி (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. சுமங்கலிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்த சுமங்கலியை திடீரென காணவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் தேடினர். அப்போது அங்கிருந்த நெல் வயலில் சுமங்கலி நின்று கொண்டிருந்தார். அவர்கள் அந்த வயலுக்கு சென்றனர். அப்போது சுமங்கலி தனது கைக்குழந்தையை வயலில் சேற்றுக்குள் அமுக்கியபடி நின்றார்.

குழந்தையின் தலை பகுதி முழுவதுமாக சேற்றுக்குள் மூழ்கி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுமங்கலியின் பிடியில் இருந்து குழந்தையை மீட்டனர். பின்பு மஞ்சேஷ்வர் தாலுகா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சேற்றில் மூழ்கடித்து கைக்குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜீஷ் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கொன்ற சுமங்கலியை கைது செய்தனர்.

சுமங்கலி தனது குழந்தையை சேற்றில் மூழ்கடித்து எதற்காக கொன்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

ஆகவே குடும்ப தகராறு காரணமாக குழந்தையை சுமங்கலி கொன்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் கொன்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News