இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல்

Published On 2024-03-16 16:26 GMT   |   Update On 2024-03-16 16:26 GMT
  • 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
  • ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.


நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படவில்லை.

ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாராளுமன்றத்துக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த யூனியன் பிரதேசத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அனந்த்நாக் தொகுதியில் மே 7 -ம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதியில் மே 13-ம் தேதியும், பாரமுல்லா தொகுதியில் மே 20-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 42.58 லட்சம் பெண்கள் மற்றும் 161 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 86.93 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News