கேரளா நரபலி வழக்கு... கைது செய்யப்பட்ட 3 பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
- நரபலி கொடுத்த 2 பெண்களையும் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர்.
- வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (வயது 51). இன்னொருவர் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி (50). இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களையும் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர். அங்கு போலீசார் தோண்டி பார்த்தபோது பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக இருந்தது. இதுபற்றி கேட்டபோது பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக கூறியிருக்கிறார்கள். மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இதுபோல வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மேலும் பல தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதால் போலீஸ் காவலுக்கு அனுப்பும்படி மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பகவல் சிங், லைலா, முகமது ஷபி ஆகியோரை 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.