இந்தியா

ஆலப்புழாவில் படகு இல்லத்தில் இருந்து தவறி விழுந்து தமிழக வாலிபர் பலி- சுற்றுலா வந்த இடத்தில் பரிதாபம்

Published On 2023-07-11 04:21 GMT   |   Update On 2023-07-11 04:21 GMT
  • படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார்.
  • தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவனந்தபுரம்:

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக் (வயது 25).வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தனது சகோதரி தீபிகாவுடன் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.

தீபக்குடன் சேர்த்து மொத்தம் 10 பேர் வந்துள்ளனர். அவர்கள் அங்கு படகு இல்லம் ஒன்றில் பயணம் மேற் கொண்டனர். படகு இல்லத்தை பொறுத்தவரை, மதியம் முதல் மாலை வரை நீர்பரப்பில் செல்லும். இரவு நேரத்தில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

அதேபோல் தீபக் குடும்பத்தினர் சென்ற படகு, சவாரி முடிந்து பள்ளத்துருத்தி அருகே உள்ள ஹவுஸ் போர்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டது. அந்த இடத்தில் படகு இல்லத்தில் தீபக் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென தீபக்கை மட்டும் காணவில்லை. படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந் திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார். அது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட 'டைவிங்' வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீபக் தங்கி இருந்த படகு நின்று கொண்டிருந்த பகுதியில் தண்ணீருக்குள் மூழ்கி தேடினர்.

அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் தீபக் பிணமாக கிடந்தார். அவரது உடலை டைவிங் வீரர்கள் மேலே கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த சகோதரி மற்றும் உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என புலம்பினர்.

இதையடுத்து தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் தமிழக வாலிபர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News