மணிப்பூரில் துணிகரம் - விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் கடத்தி கொலை
- மணிப்பூரில் விடுமுறையில் ராணுவ வீரர் வீட்டுக்கு வந்தார்.
- அவரை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்துள்ளனர்.
புதுடெல்லி:
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசித்து வந்தவர் செர்தோ தங்தங் கோம். ராணுவத்தில் வீரராக பணியாற்றிய இவர் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் நேற்று காலை 10 மணியளவில் கோமை கடத்திச் சென்றனர். அப்போது, அவரது 10 வயது மகன் இதனைப் பார்த்துள்ளான்.
இதுதொடர்பாக கோமின் மகன் போலீசாரிடம் கூறுகையில், 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் இருவரும் வீட்டின் முகப்பு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த மர்ம நபர்கள் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கோமின் தலையில் வைத்து, வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றனர் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கோமின் உடல் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மோங்ஜாம் பகுதியில் இருந்து கிழக்கே உள்ள குனிங்தெக் என்ற கிராமத்தில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை சகோதரர் மற்றும் உறவினர் அடையாளம் காட்டினர். அவரது தலையில் துப்பாக்கி குண்டு காயம் ஒன்று காணப்பட்டது.
ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.