உத்தரகாசியில் பெருவெள்ளம்: கேரள சுற்றுலாப் பயணிகள் 28 பேர் மாயம்
- தராலியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாக, கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
- தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 3 குழுக்கள் தாராலிக்குச் செல்லும் வழியில் உள்ளன.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மலை கிராமம் தராலி. ஆன்மிகத் தலமாக கருதப்படும் கங்கை உற்பத்தியாகும் இடமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தராலி கிராமம் அமைந்துள்ளது.
எனவே இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இதற்காக இங்கு ஏராளமான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன.
தராலியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாக, கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
மலையில் இருந்து ஆர்ப்பரித்து வந்த வெள்ளம், தராலியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், வீடுகளை வாரிச்சுருட்டிச் சென்றது. ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி மாயமானார்கள். 4 பேர் பலியானார்கள்.
சம்பவ இடத்துக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர், இந்தோ-திபெத் படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பலியானவர்களில் ஒருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. அவரது பெயர் ஆகாஷ் பன்வார் (வயது 35) என்று தெரியவந்துள்ளது.
இன்னும் 50 பேர் மாயமாகி உள்ளனர். இதில் ஹர்சில் ராணுவ முகாமில் இருந்த 11 ராணுவ வீரர்களும், கேரள சுற்றுலா பயணிகள் 28 பேரும் அடங்குவார்கள். அவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்பு பணி குறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழு டி.ஐ.ஜி. மொஹ்சென் ஷாஹேதி கூறியதாவது:-
தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 3 குழுக்கள் தாராலிக்குச் செல்லும் வழியில் உள்ளன. தொடர்ச்சியான நிலச்சரிவுகள் காரணமாக ரிஷிகேஷ்-உத்தரகாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இருப்பினும் மாற்று வழியை யோசித்து வருகிறோம்.
மீட்பு பணிக்காக டேராடூனில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட உள்ளன, ஆனால் மோசமான வானிலையால் அவர்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை, நிலச்சரிவு, பெருவெள்ளம் ஆகியன மீட்பு பணிக்கு தடைகளாகவும், சவாலாகவும் உள்ளன. இருப்பினும் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கங்னானியில் லிமாச்சா ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு பாலம் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தாராலி மற்றும் ஹர்சிலில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதியை ஹெலிகாப்டரில் சென்றவாறு பார்வையிட்டார். பின்னர் காயமடைந்த ராணு வீரர்கள் மற்றும் வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம். அனைவரையும் மீட்கும் முயற்சி தொய்வின்றி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.