இந்தியா

(கோப்பு படம்)

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு- புதிய ஒப்பந்தம் கையெழுத்து

Published On 2022-08-24 18:50 GMT   |   Update On 2022-08-24 18:52 GMT
  • திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
  • அடித்தட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது.

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வகை செய்யும் புதிய ஒப்பந்தம், தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் ஆகியோர் பங்கேற்றனர். 


அவர்கள் முன்னிலையில், தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் வழங்கிய சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சை பயன்களும் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அவர் கூறினார். 


திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நிதி அளிக்கவுள்ளது என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்களுடன் திருநங்கைகளுக்கான பாலியல் அறுவை சிகிச்சை திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அடிப்படை சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான தினமாக இது அமைகிறது என்றும், இந்த நடவடிக்கை பாலியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்

பின்னர் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார், சமூகத்தில் அடித்தட்டு மக்கள், கல்வி, கண்ணியத்துடன் வாழ்தல், சுகாதார உதவி, வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

Tags:    

Similar News