பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழை கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
- தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விவரங்களை கேட்டு கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.
- மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
அகமதாபாத்:
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு தகவல் ஆணைத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், விவரம் கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கெஜ்ரிவால் கேட்ட விவரங்களை வழங்கும்படி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்து இன்று உத்தரவிட்டார். அத்துடன், பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.