இந்தியா

மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் மே 10-ந்தேதிக்குள் வெளியேறுகிறது

Published On 2024-02-03 06:33 GMT   |   Update On 2024-02-03 06:33 GMT
  • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
  • மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை மார்ச் 15-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை மார்ச் 15-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக இருநாடுகள் இடையே சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று டெல்லியில் 2-வது கட்டமாக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பரஸ்பரமாக செயல்பட்டு தீர்வு காண ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காணுதல், நடப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு திட்டங்களை விரைவுபடுத்துதல் உள்பட இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான பிரச்சனைகள் குறித்து இருதரப்பும் விவாதங்கள் தொடர்ந்தன.

மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களில் ஒன்றில் ராணுவ வீரர்களை மார்ச் 10-ந்தேதிக்குள் இந்திய அரசு திரும்பப்பெறும். மற்ற இரண்டு தளங்களில் உள்ள ராணுவ வீரர்களை மே 10-ந்தேதிக்குள் திரும்பப்பெறும். இதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்று தெரிவித்தது. மேலும் உயர்மட்ட குழுவின் அடுத்த கூட்டத்தை மாலத்தீவு தலைநகர் மாலேயில் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News