அதிகாரத்தில் இருப்பவர்கள் உறவினர்களுக்கு சலுகை காட்டுவது ஜனநாயக அமைப்புக்கு விரோதமானது- சுப்ரீம் கோர்ட்
- அரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இதை விசாரித்த ஐகோர்ட், வீடு ஒதுக்கீட்டு நடவடிக்கையில் தலையிட முடியாது என மறுத்து விட்டது.
புதுடெல்லி:
அரியானா மாநில வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்ட உயர் ரக வீடுகளில், அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு என 2 வீடுகள் ஒதுக்கப்பட்டது.
அரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு. வீடு ஒதுக்கீட்டு நடவடிக்கையில் தலையிட முடியாது என மறுத்து விட்டது.
இதைத்தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினரான தினேஷ் குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரிக்க நீதிபதிகள் சஞ்சய் குமார், வினோத் சந்திரன் அமர்வு, பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது.
அத்துடன் 2 வீடுகளின் ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
அத்துடன் வீடு வாங்கியவர்களுக்கும் அபராதம் விதித்ததுடன், வீட்டில் இருந்து ஒரு மாதத்துக்குள் வெளியேறவும் உத்தரவிட்டனர்.
முன்னதாக, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் தன்னிச்சையானவை, பாரபட்சமானவை மற்றும் அமைப்பின் தகுதி அளவுகோல்களை மீறுவதாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு சலுகை வழங்குதல் மற்றும் சுயநலம் பாராட்டுதல் ஆகியவை ஒரு ஜனநாயக அமைப்புக்கு விரோதமானவை எனக்கூறிய நீதிபதிகள். அரசு சேவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சமூகத்துக்குள் வெளிப்படையான ஒதுக்கீட்டின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
வீடுகளை ஒதுக்குவதில் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் காட்டக்கூடாது என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் பாரபட்சம் மற்றும் சுயநலமே மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.