இந்தியா

திருமண நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2024-04-22 08:52 GMT   |   Update On 2024-04-22 08:52 GMT
  • மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.

அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி மைக்கேல் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.

இந்த நிலையில் பூசாரி வைத்திருந்த மைக்கில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது பூசாரி மைக்கை தூக்கி வீசினார்.

மைக் அருகில் இருந்த சீதம்மா என்பவரை மின்சாரம் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆட்டோ மூலம் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இறந்த பெண் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறிது நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் திருமண மண்டபத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News