இந்தியா

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

Published On 2023-12-13 07:39 GMT   |   Update On 2023-12-13 07:39 GMT
  • தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.
  • என் மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது.

புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

பஞ்சாப்பில் டி.எஸ்.பி.எல். எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுதர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவரும் லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.

இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அவர் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவில்லை. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடரில் தான் பங்கேற்று இருப்பதாக அவர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, "என்மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது. எனது வக்கீல்கள் குழுவால் இது கையாளப்படும்" என்றார்.

Tags:    

Similar News