இந்தியா

பிரதமர் மோடியின் பரிசு பொருட்களில் பலரும் ஏலம் கேட்கிற பொருட்கள் எவை தெரியுமா?

Published On 2022-09-19 08:41 IST   |   Update On 2022-09-19 08:41:00 IST
  • பிரதமர் மோடியின் 1,200 பரிசு பொருட்கள் ஏலம் தொடங்கியது.
  • பலரும் ஏலம் கேட்கிற பொருட்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி

பிரதமர் மோடி விழாக்களில் பங்கேற்றபோது, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பின்போது நினைவுப்பரிசுகளாக வழங்கப்பட்ட 1,200 பொருட்களை ஆன்லைன் வழியாக (மின்னணு ஏலம்) ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மின்னணு ஏலம் நேற்று முன்தினம், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளில் தொடங்கி உள்ளது. இது அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நீடிக்கிறது. இந்த ஏலம் pmmementos.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் நடத்தப்படுகிறது. அதில் அதிகம் பேர் பங்கேற்ற ஏலம் என்ற தலைப்பில் பொருட்களை பட்டியலிடும் பிரிவு உள்ளது.

இப்படி அதிகளவில் பெரும்பாலோர் ஏலத்தில் வாங்க விரும்பும் பொருட்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய ஒரு பார்வை இது:-

* பிரதமர் மோடி தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) முன்னாள் வீரர் என்பதற்கான அடையாள அட்டை. நேற்று காலை 11 மணி நிலவரப்படி இந்த அட்டையை 20 பேர் ஏலம் கேட்டுள்ளனர்.

* அயோத்தியில் கட்டப்படுகிற பிரமாண்ட ராமர் கோவில் மாதிரி. இது கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட்டுள்ளது. 6 கிலோ எடை கொண்ட இந்த மாதிரியின் அடிப்படை விலை ரூ.10 ஆயிரத்து 800 ஆகும்.

* ஏலத்துக்கு வந்துள்ள ஆன்மிக நினைவுப்பொருட்களில் உலோக சங்கு, பிள்ளையார் சிலைகள், திருப்பதி பாலாஜி மரச்சிலை மாதிரி , திரிசூலம் உள்ளிட்டவை அடங்கும். திருப்பதி பாலாஜி மரச் சிலை மாதிரியை பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக வழங்கியவர், ஆந்திர கவர்னர் பிஸ்வா பூஷண் ஹரிசந்தன் ஆவார்.

* உலோக சங்கானது, நேர்த்தியானது, அது ஒரு சிவப்பு நிற வெல்வெட் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கில் நாகத்தின் மீது விஷ்ணு ஓய்வு எடுப்பதையும், லட்சுமி தேவி அவரது பாதங்களை தொடுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு தனது சூலாயுதம், தாமரை, சங்கு போன்றவற்றை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ளார். 10 செ.மீ. நீளமும், 1150 கிராம் எடையும் உள்ள இந்த சங்கை நேற்று காலை 11 மணி வரை 30 பேர் ஏலம் கேட்டிருக்கிறார்கள்.

* சென்னையில் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (சிலை) ஏலத்துக்கு உள்ளது. சிலை தம்பி என்று அழைக்கப்படுவதாகும். இது தமிழர்களின் பாரம்பரிய உடையில் கைகளை குவித்து வணக்கம் சொல்வதாக அமைந்துள்ளது. 31 செ.மீ. உயரமும், 1,650 கிராம் எடையும் உள்ள தம்பியை 30 பேர் ஏலம் கேட்டுள்ளனர்.

* அலங்கரிக்கப்பட்ட வாள், அசோக சின்னம், நடராஜர் சிலை போன்றவையும் பலரால் ஏலம் கேட்கப்படுகிற நினைவுப்பரிசுகளாக அமைந்துள்ளன.

* தும்பிக்கையை மேல் நோக்கி உயர்த்திய தங்க முலாம் பூசப்பட்ட யானை, ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள மர செஸ் பலகை மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட 32 சதுரங்க துண்டுகள் ஆகியவையும் அடங்கும்.

* பிரதமர் மோடி பேசுவது போன்ற சிறிய சிலை

* சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் கையெழுத்திட்ட வெள்ளை டி சர்ட்டும் ஏலத்துக்கு இருக்கிறது. இதன் அடிப்படை விலை ரூ.3 லட்சம் ஆகும்.

இந்த ஏல விற்பனையில் கிடைக்கிற தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News