நேரில் வந்த #Lover... தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
- மணமக்கள் திருமண உடை அணிந்து மணமேடையில் உட்கார்ந்து இருந்தனர்.
- மண்டபத்தில் இருந்த சிலர் வாலிபரை பிடித்து தாக்கத் தொடங்கினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம்,என்.டி.ஆர் மாவட்டம், மைலாரத்தை சேர்ந்த இளம்பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிந்தது. இதனால் பெண் வீட்டார் அவசர அவசரமாக வேறு ஒரு வாலிபரை தேர்ந்தெடுத்து திருமண தேதியை நிச்சயித்தனர்.
நேற்று முன்தினம் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் திருமண மண்டபத்தில் குவிந்தனர். பாட்டு கச்சேரியுடன் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. பாடல்களுக்கு ஏற்றவாறு ஆண்களும், பெண்களும் நடனமாடி குதூகலித்தனர். மண்டபத்தில் திருமண விழா களைக்கட்டி இருந்தது.
காலை மணமக்கள் திருமண உடை அணிந்து மணமேடையில் உட்கார்ந்து இருந்தனர். புரோகிதர் வேத மந்திரங்களை வாசிக்க மங்கள வாத்தியம் முழங்க திருமண மண்டபம் பரபரப்பாக இருந்தது. சிறிது நேரத்தில் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.
அப்போது திடீரென வாலிபர் ஒருவர் ஓடி வந்து மணமக்கள் முன்பாக நின்றார். வாலிபரைக் கண்ட மணமகள் மணமேடையில் இருந்து எழுந்து ஓடி சென்று நீ வந்து விட்டாயா எனக் கூறியபடி வாலிபரை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனை கண்ட மணமகன் மற்றும் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது மணமகள் எங்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த இவரை நான் காதலிக்கிறேன். இவருடன் மட்டுமே சேர்ந்து வாழ விரும்புகிறேன் என தெரிவித்தார். மண்டபத்தில் இருந்த சிலர் வாலிபரை பிடித்து தாக்கத் தொடங்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்து வாலிபரை மீட்டனர். உடனடியாக திருமணம் நிறுத்தப்பட்டது.
மணமகளின் பெற்றோர் எங்களுக்கு ஒரே மகள் என்பதால் பல லட்சம் செலவு செய்து ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகளை செய்து இருந்தோம். மணமகளின் செயலால் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.