உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை வாபஸ் பெற வேண்டும்: டி.கே.சிவக்குமார்
- மத்திய பா.ஜனதா அரசு உணவு பொருட்களுக்கு 5 சதவீத வரி விதித்துள்ளது.
- பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி வளையத்தில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய பா.ஜனதா அரசு அவற்றை மாற்றி உணவு பொருட்களுக்கும் 5 சதவீத வரி விதித்துள்ளது.
இதனால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது. அதனால் உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வாியை வாபஸ் பெற வேண்டும். இதற்கு பதிலாக மத்திய அரசு வரி கசிவு ஏற்படும் பகுதிகளில் கவனம் செலுத்தி அதை தடுக்க வேண்டும். பணக்காரர்களுக்கு வரி விதிப்பதை விட்டுவிட்டு ஏழைகள் மீது வரியை விதிப்பது ஏற்புடையது அல்ல.
பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வரியை நுகர்வோரிடம் வசூலிக்க கூடாது என்று கூறி இருப்பதாக முதல்-மந்திரி சொல்கிறார். ஆனால் எந்த நிறுவனமும் இதை ஏற்றுக்கொள்ளாது. முதல்-மந்திரி சொல்வது பொய்யான தகவல். மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் அவர் அவவாறு கூறுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.