இந்தியா

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2025-04-13 10:44 IST   |   Update On 2025-04-13 10:44:00 IST
  • திருப்பதியில் நேற்று 72,923 பேர் தரிசனம் செய்தனர்.
  • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதியில் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று காலை வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. காத்திருப்பு அறைகளை தாண்டி எம்.பி.சி வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால்,காபி உள்ளிட்டவை வழங்கினர்.

ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில் வரை சில பக்தர்கள் செருப்பு அணிந்து வந்தனர். இதனை தடுக்க தவறிய பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்டு செய்தது.

மேலும் திருப்பதி மலையில் குறிப்பிட்ட சில இடங்களில் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் ஏழுமலையான் கோவில் பாரம்பரியத்தை காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று சென்னையை சேர்ந்த 13 பக்தர்கள் காரில் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

மீண்டும் காரில் மலை பாதையில் சென்று கொண்டு இருந்தனர். முதல் வளைவில் வந்தபோது கார் கட்டுப்பாட்டில் இருந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரில் வந்த 6 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

திருப்பதியில் நேற்று 72,923 பேர் தரிசனம் செய்தனர். 35,571 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News